தேர்தல் பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப். 10-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சூழ்நிலை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர், ஐந்து மாநில தலைமைச் செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகள், சுகாதாரத்துறை செயலாளர்களுடன் காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களுக்கு தடை நீடிக்குமா? அல்லது தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பது ஆலோசனைக்குப் பின்னரே தெரிய வரும்.