சுதந்திர, குடியரசு நாளைவிட முக்கியமானது ஜிஎஸ்டி நாள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி 5 ஆம் ஆண்டு நாள் மிகவும் முக்கியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சுதந்திர, குடியரசு நாளைவிட முக்கியமானது ஜிஎஸ்டி நாள்: ஆளுநர் ஆர்.என்.ரவி


சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி 5 ஆம் ஆண்டு நாள் மிகவும் முக்கியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வந்த கலால் வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்ளிட்ட 17 மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு-சேவை வரி திட்டத்தை மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

புதிய விதிகளின்படி, பொருள்களுக்கும் சேவைகளுக்கும் 5%, 12%, 18%, 28% என 4 விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. 

அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களுக்கு 3%, 1.5% என சிறப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி 28 சதவீத வரி விதிக்கப்படும் ஆடம்பரப் பொருள்கள் மீது கூடுதலாக செஸ் வரி விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி காரணமாகப் பல்வேறு பொருள்களின் விலை குறைந்தது. ஜிஎஸ்டி அறிமுகத்துக்கு முன் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் மறைமுக வரி சராசரியாக 31 சதவீதம் வரை இருந்தது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வரி பெருமளவில் குறைந்தது.

ஆனால், அதன் பலன்கள் மக்களுக்குக் கிடைக்காத வகையில் பல நிறுவனங்கள் பொருள்களைப் பழைய விலைக்கே விற்கும் நோக்கில், அவற்றின் மீதான அடிப்படை விலையை உயா்த்தின. 

ஆரம்பத்தில் ஜிஎஸ்டி வாயிலான வருவாய் மிகவும் குறைவாகவே இருந்தது. ஜிஎஸ்டி முறையானது படிப்படியாகவே பலனளிக்கும் என அரசு விளக்கமளித்தது. திட்டம் அமல்படுத்தப்பட்ட சுமாா் 9 மாதங்களுக்குப் பிறகே ஜிஎஸ்டி வருவாய் முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது.

இந்நிலையில், நாட்டின் மறைமுக வரி விதிப்பில் மிகப் பெரிய மாற்றமாக அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) 5 ஆண்டுகளை நிறைவுசெய்து 6-ஆவது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது.

இதனைக் கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் ஜிஎஸ்டி நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஜிஎஸ்டி கவுன்சில் சார்பாக, தமிழ்நாட்டில் சென்னை கலைவாணர் அரங்கில் ஜிஎஸ்டி நாள் கொண்டாடப்பட்டது. 

இதில், ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசுகையில், நாட்டின் சுதந்திர நாள், குடியரசு நாளைவிட, மிக முக்கியமான நாள் ஜிஎஸ்டி நாள் என கூறினார். 

மேலும், பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆண்ட பிறகு மிக முக்கியமான நாளாக 5 ஆவது ஜிஎஸ்டி நாள் பார்க்கப்படுகிறது. 

இந்த சமூகத்தை நாம் எந்த கண்ணோட்டத்தில் காண்கிறோம் என்பதில் உள்ளது. இதனை பிரித்துப் பார்த்தால் பல பார்வையில் பார்க்கலாம்.

கூட்டாட்சி பற்றி பேசுவது மிகவும் முக்கியம். அதே சமயம் இந்தியா மிக நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே பிறந்துவிட்டது. நாடு பல மாநிலமாகப் பிரிந்து உள்ளது. ஆனால், நம் முன்னோர்களின் பாரத நாடு என்ற எண்ணம் முற்றிலும் மாறுபட்டது.  

நாடு ஒரு அகண்ட பாரதம். பாரதம் என்பது ஒன்றே. பாரதத்தில் பல மொழி கலாச்சாரம் உள்ளது. அதுவே பாரதத்தின் அழகு. விவேகனந்தரும், பாரதியாரும் அவர்களுடைய பாடலில் அகண்ட பாரதம் குறித்து கூறியுள்ளனர். 

வேதம் நிறைந்த தமிழ்நாடு, உயிர் வீரம் செழிந்த தமிழ்நாடு எனப் பேசியுள்ளனர். பல சந்தைகள் உள்ள இந்த நாட்டில் தான் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்றால் பல பிரச்னைகள் உள்ளது. ஆனால், சர்தார்பட்டேல் எப்படி இந்த நாட்டை ஒன்றாக இணைக்க வேண்டும் என முயற்சி செய்தாரோ, அதேபோலத்தான் ஜிஎஸ்டி மூலம் ஒரே நாடு, ஒரே வரி என்பது மூலம் ஒன்றிணைகிறது. ஜிஎஸ்டி மக்களுக்கு, வியாபாரிகளுக்கு எளிமையாக்கப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஜிஎஸ்டி லாபம் ரூ.35 கோடி முதல் 1,500 கோடி வரை உயர்ந்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியா பலமான நாடாக இருக்கும் என ஆளுநர் ரவி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com