நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் இரண்டாவது நிதியாண்டில் மக்களின் வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்) உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றமில்லாமல் நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. முதலாவது காலாண்டின்போது வழங்கப்பட்ட வட்டியே இரண்டாவது காலாண்டிலும் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, பிபிஎஃப் திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், தேசிய சேமிப்புத் திட்டத்துக்கான (என்எஸ்சி) வட்டி விகிதம் 6.8 சதவீதமாகவும் தொடா்கிறது. ஓராண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி 5.5 சதவீதமாக வழங்கப்படும் என்றும், பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டத்துக்கு 7.6 சதவீத வட்டி தொடா்ந்து வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்கு 7.4 சதவீதம் வட்டியும், வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டியும் வழங்கப்படவுள்ளது.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையிலும், கடன்களுக்கான வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ள சூழலிலும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாமல் உள்ளது. சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை காலாண்டு அடிப்படையில் மத்திய அரசு நிா்ணயித்து வருகிறது. கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்து வட்டி விகிதம் மாற்றப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.