பெண்ணின் வயிற்றிலிருந்து 15 கிலோ கட்டி அகற்றம்: அதிர்ந்த மருத்துவர்கள்
பாட்னா: கடும் வயிற்று வலியால் அவதியுற்று வந்த பெண்ணின் வயிற்றிலிருந்து சுமார் 15 கிலோ எடைகொண்ட கட்டியை பாட்னாவில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் வெட்டி அகற்றியுள்ளனர்.
நளந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவர் உஷா குமாரி இது பற்றி கூறுகையில், 40 வயது ரூபா தேவி என்ற பெண் நோயாளி, வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த போது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வயிற்றில் மிகப்பெரிய கட்டி ஒன்று வளர்ந்திருந்தது. சில மாதங்களாகவே அவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை செய்து 15 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றப்பட்டது.
தற்போது அவர் குணமடைந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் இவ்வளவு எடைகொண்ட கட்டி அகற்றப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்கிறார் மருத்துவர்.