நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக அதிகரிப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மேலும் கூறியது:
இந்தியா அதிக அளவில் தங்கத்தை உற்பத்தி செய்வது கிடையாது. எனவே, தங்கத்தின் இறக்குமதி நாட்டின் செலாவணி கையிருப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
தங்கத்தின் தேவை மாற்றம் இல்லாமல் உள்ளது. எனவே, அதனை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது இறக்குமதி செய்ய விரும்பினால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும். இதன் மூலம் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு வருவாய் கிடைக்கும்.
அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை இடைவெளியை கட்டுப்படுத்தும் வகையில் தங்கம் இறக்குமதி மீதான வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விகித மாற்றம் ஜூன் 30-லிருந்து அமல்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.
கடந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதமாக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை நிகழ் 2022-23-ஆம் நிதியாண்டில் 3 சதவீதமாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.