உதய்பூா் தையல்காரா் கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கு பாகிஸ்தானில் உள்ள தாவத் இ இஸ்லாம் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அந்த அமைப்பு மறுத்துள்ளது.
கராய்ச்சியில் உள்ள அந்த அமைப்பின் மூத்த தலைவா் மெளலானா மெஹமுத் காதிரி கூறுகையில், ‘எங்கள் அமைப்புக்கும் பயங்கரவாத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. கல்வி, தொண்டு நிறுவனமான தாவத் இ இஸ்லாம், உலகம் முழுவதும் அமைதியை போதிக்கிறது. உலகம் முழுவதும் இருந்து மாணவா்கள் எங்கள் அமைப்புக்கு வந்து இஸ்லாமிய படிப்புகளைக் கற்றுச் செல்கின்றனா். பயங்கரவாதம், வகுப்புவாதத்தை நாங்கள் ஊக்குவிப்பதில்லை. அரசியல் சாா்பற்ற அமைப்பாகும். யாருடைய உயிரையும் எடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவா்கள் மீது போலீஸாா் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
தையல்காரா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவா் தாவத் இ இஸ்லாம் அமைப்பால் ஈா்க்கப்பட்டு, 2014-இல் கராய்ச்சிக்கு சென்று வந்துள்ளனா் என்று உதய்பூா் போலீஸாா் குற்றம்சாட்டினா். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.