ஹிமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பேருந்து திங்கள்கிழமை காலை விபத்துக்குள்ளானதில் பள்ளிக் குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர். பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேசம், குலு மாவட்டத்திலிருந்து சைஞ் பகுதிக்கு பள்ளி மாணவர்கள் உள்பட பொது மக்களை ஏற்றிச் சென்ற பேருந்து திங்கள்கிழமை காலை 8 மணியளவில் நியோலி-ஷான்சர் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சோல்ஜர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினரும், அப்பகுதி மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக வெளியான தகவலில்படி, சில பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காயங்களுடன் மீட்கப்படுபவர்கள் மருந்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ஹிமாச்சலப் பிரதேசம் முதல்வர் ஜெய்ராம் தாகுர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குலுவில் நிகழ்ந்த பேருந்து விபத்து நெஞ்சை உலுக்குகிறது என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.