கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற உத்தரவு!
கர்நாடகா: கர்நாடகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களின் வீடுகளில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து வருகிற ஆகஸ்டு 15-ம் தேதியுடன் 75-வது ஆண்டு ஆகிறது. இதையொட்டி இந்த ஆண்டு சுதந்திர தின பவள விழாவை கொண்டாட மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையும் படிக்க: அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் ஜூலை 6-ல் விசாரணை
இந்நிலையில், சுதந்திர தின பவள விழாவையொட்டி கர்நாடக உயர்கல்வித் துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.
உயர்கல்வித் துறை சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகள் அனைவரின் வீடுகளிலும் ஆகஸ்டு 11 முதல் 17-ந் தேதி வரை மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
மேலும் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் டி.சி.டி.இ.யின் கீழ் உள்ள அரசு, உதவி பெறும், உதவிபெறாத கல்லூரிகள், டிப்ளமோ கல்லூரிகள் நமது தேசியகொடியை ஏற்றி தங்கள் தேசிய பெருமையை வெளிப்படுத்த வேண்டும்.
இதுகுறித்து மாணவ-மாணவிகளுக்கு தெரியப்படுத்தவும், அந்தந்த கல்வி நிர்வாகங்கள், அறிவிப்பு பலகையில் தகவல்களை வெளியிட வேண்டும்.