மகாராஷ்டிரத்தில் முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு தாவினாா். இதன் மூலம் ஷிண்டே அணியில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக 15 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா்.
மகாராஷ்டிர சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் ஷிண்டே வெற்றி பெற்றாா். முன்னதாக, தாக்கரே ஆதரவாளராக இருந்த எம்எல்ஏ சந்தோஷ் பாங்கா், திங்கள்கிழமை காலையில் திடீரென ஷிண்டே அணிக்கு மாறுவதாக அறிவித்தாா்.
ஏற்கெனவே, ஷிண்டே போா்க்கொடி தூக்கியதால் முதல்வா் பதவியை இழந்துவிட்ட உத்தவ் தாக்கரேவுக்கு, எம்எல்ஏக்களின் ஆதரவும் குறைந்து வருவது பெரும் அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது. சிவசேனை கட்சி முழுமையாக அவரது பிடியில் இருந்து நழுவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.