கர்நாடகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்பை உத்தரவிட்டுள்ளார்.
கடலோர மாவட்டங்களில் இடைவிடாத கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துணை ஆணையர்களிடம் பேசி நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, குடகு, பெலகாவி, ஹுப்பள்ளி, ஷிவமொக்கா, சிக்கமகளூரு மற்றும் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலும் கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் தொடர் மழை காரணமாக, நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன, மேலும் பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். தட்சிண கன்னடாவில் மேலும் 2 நாள்களுக்கு மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பல ஆறுகள் அபாய அளவை தாண்டியதால் விவசாய வயல்களும், பண்ணைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
சிக்கமகளூர் மாவட்டம், தொகரிஹங்கல் கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளியில், 1-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி திங்கள்கிழமை வீடு திரும்பியபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பள்ளி மாணவியின் உடலைத் தேடும் பணி 2வது நாளாகத் தொடர்கிறது.