நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஜன்னல் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஸ்பைஸ்ஜெட் விமானம், மும்பை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முன்னுரிமை அடிப்படையில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கியூ400 ரக விமானம், குஜராத் மாநிலம், கண்ட்லா துறைமுகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது. 23,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த விமானம், மும்பை விமான நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானத்தின் உள் அழுத்தமும் சீராக்கப்பட்டது என்றாா் அவா்.
செவ்வாய்க்கிழமை காலை, தில்லியில் இருந்து துபை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கராச்சிக்கு திருப்பிவிடப்பட்டது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்களில் கடந்த 17 நாள்களில் 7 முறை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை நேரிட்ட இரு சம்பவங்கள் குறித்தும், இதற்குமுன் நேரிட்ட 5 சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கூறியுள்ளது.