மகாராஷ்டிரத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருவர் அடித்துச் செல்லப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் கனமழையினால் 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழையில் இருவர் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும், வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் பலத்தக் காயமடைந்துள்ளார்.
பல்கார் மாவட்டத்தில் மழையின் சராசரி 89.27 மில்லி மீட்டராக உள்ளது. பல்கார் மாவட்டத்தின் வாடா தாலுக்கா அதிகபட்சமாக 135 மில்லி மீட்டர் மழைப்பொழிவைப் பெற்றுள்ளது.
தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு:
மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட பேரிடர் மேலாண்மைத் தலைவர் விவேகானந்த் கதம் தெரிவித்தார்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர்:
ரமேஷ் ஜான்யா (51 வயது) என்பவர் தகானு தாலுக்காவைச் சேர்ந்தவர். இவர் இன்று (ஜூலை 7) வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் அதிகாரிகள் இவரது உடலைப் மீட்டனர்.
அதே போல நேற்று (ஜூலை 6) அழுகிய நிலையில் வடிகாலில் இருந்து ஒருவரின் உடல் கண்டுக்கப்பட்டது. இறந்தவர் ராகுல் விஷ்வகர்மாவாக இருக்கலாம் எனக் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். அவர் அருகிலுள்ள தொழிற்சாலையில் வேலை செய்து திரும்பும்போது வெள்ள நீரினால் அடித்து வடிகாலில் தள்ளப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.