பெங்களூரு: கர்நாடகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெய்து வரும் கனமழையினால் மக்கள் மண்சரிவு, வெள்ள அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் 14 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று பிற்பகல் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சிக்கமகளூர், ஷிவமொக்கா, குடகு, ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு கர்நாடகத்தின் பெலகாவி, கலபுர்கி மற்றும் பிதார் மாவட்டங்களுக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, ஜூலை மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் 94 சதவீதம் மழை பெய்துள்ளது.
மாநிலத்தின் கடலோர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 3 தொழிலாளர்கள் பலியாகினர். கிருஷ்ணா மற்றும் காவிரி ஆற்றுப்படுகை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதிவுற்றனர்.