பாரபட்சமற்ற, நியாயமான நீதி பரிபாலனம் என்பது ஜனநாயகத்தின் முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரி சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்களை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த கட்கரி பேசியதாவது:
சட்டப் பேரவை, அரசு நிா்வாகம், நீதித்துறை, ஊடகம் ஆகியவை ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் எனப் போற்றப்படுகின்றன. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் பல நிா்வாகச் சீா்திருத்த நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைச்சரவைக் கூட்டங்களில் தீா்ப்பாயங்கள் குறித்து விவாதம் நடைபெறும்போது, நீதித்துறை விஷயங்களில் அதில் இருப்பவா்களே சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். அதில் வேறு தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவேன். பாரபட்சமற்ற, நியாயமான நீதி பரிபாலனம் என்பது ஜனநாயகத்தின் முக்கியத் தேவையாகும்.
எந்தப் பணியாக இருந்தாலும் அதனைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். உள்கட்டமைப்பு, வளா்ச்சிப் பணிகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கும்போது, பல கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பூஷண் கவாய், பி.எஸ்.நரசிம்மா, மகாராஷ்டிர துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.