குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் பொறுப்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று தேசிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் கடுமையான தோல்வியை தழுவிய காங்கிரஸ், ஆட்சி செய்துவந்த பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்தது. இதற்கிடையே மகாராஷ்டிர மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிக்க | சசிகலா குடும்பத்தினரைத் தவிர்க்கும் உத்தியா?
குஜராத், ஹிமாச்சல் தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்கும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்காக பல்வேறு யுக்திகளை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், இரண்டு மாநிலங்களுக்கான மேலிடத் தேர்தல் பார்வையாளர்களை காங்கிரஸ் நியமித்துள்ளது. குஜராத் தேர்தலுக்கு மூத்த பார்வையாளராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டையும், பார்வையாளர்களாக டி.எஸ்.சிங் டியோ, மிலிண்ட் டியோரா ஆகியோரை நியமித்துள்ளனர்.
ஹிமாச்சல் தேர்தலுக்கு மூத்த பார்வையாளராக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், பார்வையாளராக சச்சின் பைலட், பர்தாப் சிங் பஜ்வா ஆகியோரை நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.