நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூலை 13) நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர் நலன், தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர்,
நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளோம். இதனால் ஜூலை 15ஆம் தேதி முதல் அடுத்த 75 நாள்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அமைச்சரவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த பூஸ்டர் தடுப்பூசியினை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம். 200 கோடி கரோனா தடுப்பூசி செலுத்திய நாடு என்ற இலக்கை எட்டும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், குஜராத் மாநிலத்தின் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வகையில், தாக்ரா மலை - அம்பாஜி - அபு சாலை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2798.16 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 2026-27ஆம் ஆண்டில் முடிவடையும் எனவும் தெரிவித்தார்.