பருவமழை தீவிரமானதால் காரீப் பருவ விதைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக மத்திய வேளாண் அமைச்சக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: கடந்த வார நிலவரப்படி காரீப் பருவத்தின் ஒட்டுமொத்த பயிரிடும் பரப்பளவு கடந்தாண்டை காட்டிலும் 9.27 சதவீதம் சரிவடைந்து 406.66 லட்சம் ஹெக்டேராக உள்ளது. குறிப்பாக, காரீப் பருவத்தின் முக்கிய பயிராக விளங்கும், நெல் பயிரிடும் பரப்பு 24 சதவீதம் சரிவடைந்து 72.24 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டில் நெல் பயிரிடும் பரப்பளவானது 95 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து காணப்பட்டது.
நெல் தவிர, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவற்றின் சாகுபடி பரப்பும் கடந்த வாரம் வரை குறைவாகவே உள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்ததால் காரீப் சாகுபடியில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது. எனினும், அதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. இம்மாதத்தில் அது சரிசெய்யப்படும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜூனில் தொடங்கும் தென்மேற்கு பருவமழையையொட்டி காரீப் பருவ விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், பருவமழை தாமதமானதால் விதைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜூலையில் பருவமழை தீவிரமாகியுள்ளது.
இருப்பினும், ஜூன் 1 முதல் ஜூலை 6 வரையிலான நிலவரப்படி மத்திய இந்தியாவில் 10 சதவீதமும், வடமேற்கு பகுதியில் 2 சதவீதமும் பருவமழைக்கு பற்றாக்குறை காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.