இடுகாட்டில் கேட்ட அழுகுரல்: பேய் என நினைத்த மக்கள் பார்த்தது என்ன?

பெண்ணின் அழுகுரல் கேட்டு, பேயாக இருக்குமோ என்ற அச்சத்தோடு சென்ற  கிராம மக்கள், அங்கு உயிரோடு ஒரு குழந்தை புதைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இடுகாட்டில் கேட்ட அழுகுரல்: பேய் என நினைத்த மக்கள் பார்த்தது என்ன?
இடுகாட்டில் கேட்ட அழுகுரல்: பேய் என நினைத்த மக்கள் பார்த்தது என்ன?


பாட்னா: பிகார் மாநிலம் பாட்னா அருகே, சரண் மாவட்டத்தில் இடுகாட்டிலிருந்து பெண்ணின் அழுகுரல் கேட்டு, பேயாக இருக்குமோ என்ற அச்சத்தோடு சென்ற  கிராம மக்கள், அங்கு உயிரோடு ஒரு குழந்தை புதைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட ஒரு குழந்தை அங்கு உதவி கேட்டு அலறிக் கொண்டிருந்ததைப் பார்த்த கிராம மக்கள் உடனடியாக மண்ணை அகற்றி குழந்தையை மீட்டதால், உயிர் காப்பாற்றப்பட்டது.

இந்த சம்பவம் கோப்பா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட சரண் மாவட்டம் மர்ஹா நதிக்கரையோரம் உள்ள கிராமத்தில் நடந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், அந்த இடுகாட்டுக்கு அருகே விறகுகள் பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு அழுகுரல் கேட்டுள்ளது. அதை அவர் பேயின் குரல் என்று நினைத்து கிராமத்துக்குள் ஓடிச் சென்று நடந்ததைக் கூறியுள்ளார்.

உடனே, கிராம மக்கள் திரண்டு இடுகாட்டுக்கு வந்து பார்த்தபோது, உயிரோடு ஒரு குழந்தை புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். உடனடியாக அனைவரும் ஒன்றிணைந்து மண்ணை அகற்றிப் பார்த்த போது, அங்கே வாயில் களிமண் வைத்து மூடப்பட்டிருந்த நிலையில் மூன்று வயது குழந்தை உயிரோடு புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.

உடனடியாக குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதிவி சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையிடம் விசாரித்த போது, குழந்தையின் பெயர் லாலி என்றும், பெற்றோர் ராஜூ ஷர்மா-ரேகா ஷர்மா என்றும் கூறியுள்ளது. ஆனால் தனது ஊரின் பெயர் தெரியவில்லை என்று கூறியிருக்கிறது.

தனக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த விவரிக்கையில், தன்னை தனது தாயும், பாட்டியும் இந்த இடுகாட்டுக்குக் கொண்டு வந்து குழிதோண்டி புதைத்ததாகவும், அப்போது தான் அதிகமாக சத்தம் போட்டதால் களிமண்ணை எடுத்து வாயில் வைத்து மூடி, குழிக்குள் தள்ளி புதைத்ததாகவும் கூறியுள்ளது.

உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் பெற்றோரை தேடி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com