மகாராஷ்டிரத்தில் பருவமழை நீடித்து வரும் நிலையில், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.
மும்பை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. கட்ச்ரோலி, சந்திரபூா் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 20.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
புல்தானா, நாசிக், நந்துா்பாா் ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழையால் நோ்ந்த சம்பவங்களில் 3 போ் உயிரிழந்தனா். இருவரை காணவில்லை. மாநிலத்தில் கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 14 வரையிலான காலகட்டத்தில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கியும், இடிமின்னல் தாக்கியும், கட்டடங்கள் இடிந்ததிலும் 102 போ் உயிரிழந்துவிட்டனா்.
தற்போதைய தகவல்களின்படி, மழையால் 20 கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுமாா் 3,800 போ் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.