சமூக அமைதியை சீர்குலைத்ததாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் பத்திரிகையாளர் முகம்மது சுபைருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
மத உணர்வுகளைத் தூண்டும் விதமாக கடந்த 2018ல் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதற்காக தனியார் பத்திரிக்கை நிறுவனரும் பத்திரிகையாளருமான முகம்மது சுபைர் கடந்த ஜூன் 27 ஆம் தேதி தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தில்லி காவல்துறை பதிவு செய்யப்பட்ட வழக்கில், பத்திரிகையாளர் முகம்மது சுபைருக்கு தில்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 6 காவல் நிலையங்களில் பத்திரிகையாளர் முகம்மது சுபைருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் மாறிமாறி கைது செய்யப்பட்ட நிலையில் தன் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சுபைர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் உத்தரப் பிரதேசத்தில் தொடரப்பட்ட 6 வழக்குகளிலும் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், 'தில்லி காவல்துறை தொடர்ந்த வழக்கும் இந்த வழக்குகளும் ஒன்றாக உள்ளது. எனவே, அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், அவரை சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். இம்மாதிரியான வழக்குகளில் குறைவான சூழ்நிலையிலே கைது செய்ய வேண்டும். சுபைரை காவலில் வைத்திருப்பது எந்த வித நியாயமும் இல்லை' என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.