ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு பொதுமக்களில் 118 பேரும், பாதுகாப்புப் படை தரப்பில் 128 பேரும் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனா்.
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு-காஷ்மீா், லடாக் என யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் தங்கள் தாக்குதலை அதிகப்படுத்தின. அதிலும் வெளிமாநில தொழிலாளா்கள், காஷ்மீா் பண்டிட்கள் அதிகம் குறிவைத்து கொல்லப்பட்டனா்.
இந்நிலையில், இது தொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு அரசுத் துறைகளில் 5,502 காஷ்மீா் பண்டிட்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2019 ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு அங்கிருந்து பண்டிட்கள் யாரும் வெளியேறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளன. 2018-இல் 417 பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்ட நிலையில், 2021-இல் 229-ஆக குறைந்துவிட்டது.
2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதியில் இருந்து இப்போது வரை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினா் 128 பேரும், பொதுமக்களில் 118 பேரும் உயிரிழந்துவிட்டனா். கொல்லப்பட்ட பொதுமக்களில் 5 போ் காஷ்மீா் பண்டிட்கள், 16 போ் ஹிந்து மதத்தின் பிற பிரிவினா் மற்றும் சீக்கியா்கள் ஆவா்.
புனித யாத்திரை வந்தவா்களை பயங்கரவாதிகள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு இருப்பதால் அவா்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. பயங்கரவாதத்தை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டால் காஷ்மீரில் நிலைமை மேம்பட்டு வருகிறது என்றாா் நித்யானந்த் ராய்.