காந்தி குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்த பாஜக விரும்புவதாக காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குற்றம்சாட்டியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, 'சோனியா காந்தியை கேள்வி கேட்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், கேள்வி எழுப்பப்படுவதன் பின்னணியில் உள்ள நோக்கத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
காந்தி குடும்பம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை களங்கப்படுத்தவே பாஜக விரும்புகிறது, அதனால்தான் அவர்கள் இதுபோன்ற சதித்திட்டங்களை தீட்டுகிறார்கள். காங்கிரஸ் சித்தாந்தத்தின் கட்சி என்று அவர்களுக்குத் தெரியும். காங்கிரஸின் சித்தாந்தம் பாஜகவிற்கு பிடிக்கவில்லை என்பதனால் இவ்வாறு சதி செய்கிறார்கள்.
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்தை முன்வைக்கிறார்கள். ஆனால், 54 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியில் ஊழல் என்றால் மக்கள் நம்புவார்களா? அதுவும் சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றவர்கள் தங்கள் குடும்பத்தையே தியாகம் செய்தவர்கள்.
பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவதைப் பெருமையாகக் கருதும் அதேநாளில், விசாரணை என்ற பெயரில் பிரதமர் பதவியைத் தியாகம் செய்த ஒரு பெண்ணுக்கு அநீதி இழைத்துள்ளார்கள்' என்றார்.
இதையும் படிக்க | சோனியா விசாரணைக்கு எதிராக போராட்டம்: காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது