ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிராமப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்களின் மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுக்குள் வளர்க்கப்படும் ஒரு மரத்துக்கு தலா 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் தலா 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
அதேவேளையில், பூச்செடிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும், மரம் வளர்ந்து பெரியதாகி, நிழல் தரும் வகையிலான மரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தின் 73வது வன மகோத்சவ நிகழ்ச்சியின்போது இந்த அறிவிப்பினை ஹேமந்த் சோரன் வெளியிட்டார்.
இது குறித்து மின்துறை அதிகாரிகள் கூறுகையில், முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதற்கான தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
நமது சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதனை மீட்டெடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் சோரன் குறிப்பிட்டார்.