துமகுரு: வளர்ப்புக் கிளியை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசளிக்கப்படும் என்று ஒரு குடும்பம் அறிவித்திருந்த நிலையில், அதனைக் கண்டுபிடித்துக் கொடுத்தவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
தங்களது காணாமல் போன கிளியைக் கண்டுபிடித்துக் கொடுத்தவருக்கு, அவர்கள் அறிவித்தபடி ரூ.50 ஆயிரத்தைக் கொடுக்காமல், மகிழ்ச்சியில் திளைத்த அந்தக் குடும்பம் ரூ.85 ஆயிரத்தைப் பரிசளித்து இன்பக் கடலில் தத்தளிக்க வைத்தது.
கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது வளர்ப்புக் கிளியான ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த சாம்பல் நிறம் கொண்ட ருஸ்தாமா என்று பெயரிடப்பட்ட கிளி காணாமல் போன நிலையில், அதனைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று துண்டு பிரசுரங்கள் அச்சடித்து பல இடங்களுக்கும் வழங்கினார்.
இந்த நிலையில், தனது வீட்டு வாசலில் சாம்பல் நிறத்திலிருந்த கிளியை ஸ்ரீனிவாசன் என்பவர் பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார். அப்போதுதான், இந்தக் கிளியை வளர்த்து வந்தவர்கள் தேடி வந்தது துண்டு பிரசுரம் மூலம் தெரிய வர, அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார்.
அவர்களது குடும்பத்தினர் கூறுகையில், இரண்டு சாம்பல் நிறக் கிளிகளை தாங்கள் வளர்த்து வந்ததும், கடந்த 16ஆம் தேதி ஒன்று காணாமல் போனதால் கவலை அடைந்ததாகவும் கூறியுள்ளனர்.
மீண்டும் கிளிகள் ஒன்றாக இணைந்த மகிழ்ச்சியில் குதூகலித்த குடும்பத்தினர், துண்டு பிரசுரத்தில் அறிவித்தபடி, வெறும் 50 ஆயிரம் ரூபாயை கொடுக்காமல், ரூ.85 ஆயிரம் கொடுத்து இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.