பெங்களூரு: பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அடுத்த கட்டடத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தால் மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
கொள்ளையர்கள் ரூ.4.5 லட்சத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு, அதிக பாதுகாப்பு நிறைந்த ராஜ் பவனையும் தாண்டிச் சென்று மாயமாய் மறைந்துள்ளனர். இது குறித்து வந்த புகாரினைத் தொடர்ந்து அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ள காவல்துறையினர், இதுவரை எந்த துப்பும் கிடைக்காமல் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் ஏதோ நள்ளிரவில் நடக்கவில்லை. கடந்த 16ஆம் தேதி சனிக்கிழமை பட்டப்பகலில் நடந்துள்ளது. ஆனால், தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இத்தனைக்கும் இது மிகுந்த பாதுகாப்பு நிறைந்த பகுதியாகும். கொள்ளைச் சம்பவம் நடந்த பகுதிக்கு மிக அருகே, பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகம், ஆளுநர் மாளிகை, விதான் சௌதா ஆகியவை அமைந்துள்ளன.
அப்பகுதியில் ஏராளமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விடலாம் என்று நினைத்திருந்த காவலர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் அதில் ஒரு சில கேமராக்கள் மட்டுமே இயங்கி வந்தது தெரிய வந்துள்ளது.