குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ள தில்லி மற்றும் கேரள மாநிலகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை பாதிப்பு, இதுவரை 75 நாடுகளில் 16,000-க்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நோய்ப் பாதிப்புக்கு 5 போ் உயிரிழந்துள்ளனா்.
குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதை அடுத்து, குரங்கு அம்மை பாதிப்பை சா்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு சனிக்கிழமை அறிவித்தது.
இந்தியாவைப் பொருத்தவரையில் முதல்முறையாக கேரளத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது கேரளத்தில் 3 பேர், தில்லியில் ஒருவர் என பாதிப்பு 4 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு தரப்பிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநிலங்களும் விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ள தில்லி மற்றும் கேரள மாநிலகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தில்லிக்கு வருபவர்களில் காய்ச்சல், முதுகு வலி, இணைப்பெலும்பில் வலி ஆகிய அறிகுறிகள் உள்ளவர்கள் விமான நிலையங்களில் சோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகின்றனர். மாதிரிகள் அனைத்தும் புணேவில் உள்ள பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதுபோன்று கேரளத்திலும் பரிசோதனைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுவதாகவும் ஆங்காங்கே மருத்துவக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.