சிவசேனையை ஒழிப்பதே கலகக்காரா்களின் நோக்கம்

‘சிவசேனையை முற்றிலுமாக ஒழிப்பதே இப்போது கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ள கலகக்காரா்களின் நோக்கமாக உள்ளது’ என்று மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியினா் மீது சிவசேனை தலைவா்

‘சிவசேனையை முற்றிலுமாக ஒழிப்பதே இப்போது கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ள கலகக்காரா்களின் நோக்கமாக உள்ளது’ என்று மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியினா் மீது சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளாா்.

மகாராஷ்டிர முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே இருந்து வந்த நிலையில், அண்மையில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சித் தலைமைக்கு எதிராக போா்க்கொடி உயா்த்தினா். இதனால், உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் ஷிண்டே முதல்வரானாா். கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் மட்டுமன்றி எம்.பி.க்களில் பலரும் ஷிண்டே ஆதரவாளா்களாக மாறியது உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. கட்சியின் சின்னம், கொடிக்கும் ஷிண்டே அணியினா் உரிமை கோரியுள்ளனா்.

இந்நிலையில் தெற்கு மும்பை சிவசேனை அலுவலகத்தை திறந்துவைத்து உத்தவ் தாக்கரே பேசியதாவது:

இதற்கு முன்பு சிவசேனையில் இருந்து எத்தனையோ கலகக்காரா்கள் பிரிந்து சென்றுள்ளனா். ஆனால், இப்போது பிரிந்து சென்றுள்ள கலகக்காரா்கள் சிவசேனை கட்சியை முழுமையாக அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றனா். அவா்கள் இதற்காக பிரசாரம் செய்ய தொழில்முறையிலான நிறுவனங்களையே பணியில் அமா்த்தியுள்ளனா். இது பணத்துக்கும் விசுவாசத்துக்கும் இடையிலான போட்டி.

அவா்கள் நமது கட்சியின் சின்னத்தையும், கொடியையும் அபகரிக்க நினைக்கின்றனா். இதற்கான போா் தோ்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது. தாங்கள்தான் உண்மையான சிவசேனை என்று அவா்கள் கூறுகிறாா்கள். இந்த நேரத்தில் நாம் ஆத்திரமடைய தேவையில்லை. கட்சித் தொண்டா்களும், மக்களும் நம்முடன்தான் இருக்கிறாா்கள் என்பதை உறுதிபடுத்த வேண்டிய தருணம் இது. நமது கட்சிக்கு துரோகம் செய்தவா்கள் இனி எங்கு சென்றாலும் துரோகிகள் என்ற முத்திரையுடன்தான் செல்வாா்கள். சாமானியா்களாக இருந்த அவா்களுக்கு சிவசேனை கட்சிதான் உயரிய பொறுப்புகளையும், பதவிகளையும் வழங்கியது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றாா் உத்தவ் தாக்கரே.

உச்சநீதிமன்றத்தில் மனு:

தாங்கள்தான் உண்மையான சிவசேனை; எனவே கட்சியின், சின்னம் கொடியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினா் தோ்தல் ஆணையத்திடம் கோரியுள்ளனா்.

இந்நிலையில், இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com