ஆசிரியர் நியமன முறைகேடு: அமலாக்கத்துறை முன் திரிணமூல் எம்எல்ஏ ஆஜர்!
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சாா்யா, அமலாக்கத்துறை முன்பாக இன்று ஆஜராகியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக உள்ள பாா்த்தா சாட்டா்ஜி, முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையால் கடந்த ஜூலை 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது நெருங்கிய தோழியான நடிகை அா்பிதா முகா்ஜியும் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை காவலில் உள்ளனர்.
இதன் தொடா்ச்சியாக, மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவரும், நாடியா மாவட்டத்தைச் சோ்ந்தவருமான எம்எல்ஏ மாணிக் பட்டாச்சாா்யாவிடமும் விசாரணை நடத்த முடிவு செய்து அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதன்படி இன்று(புதன்கிழமை) பிற்பகல் அவர் கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். அமைச்சர் ஒருவரைத் தொடர்ந்து எம்எல்ஏவும் விசாரணையில் சிக்கியுள்ளது மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.