நாட்டுக்கு எதிராக செயல்படும் சக்திகளை அகற்ற தேவை ஏற்பட்டால் கர்நாடகத்தில் யோகி மாடல் அரசு கொண்டுவரப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கர்நாடகத்தின் முதல்வராக பதவியேற்று இன்றுடன் ( ஜூலை 28) ஓராண்டினை நிறைவு செய்கிறார். தனது தலைமையிலான கர்நாடக அரசிற்கு அவர் 100-க்கு 100 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது: “ உத்தரப் பிரதேச சூழலுக்கு யோகி ஆதித்யநாத் சரியான முதல்வர். அதேபோல கர்நாடகாவில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க பல விதமான முயற்சிகள் அரசினால் கையாளப்பட்டு வருகின்றன. இருப்பினும், தேவை உருவானால் கர்நாடகத்திலும் யோகி மாடல் அரசு கொண்டுவரப்படும்” என்றார்.
இதையும் படிக்க: செஸ் விளையாட்டு பிறந்த இடத்தில்...: ஒலிம்பியாட் பற்றி சச்சின்
பாஜக ஆதரவாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை இதனை தெரிவித்தார். பாஜக ஆதரவாளர்கள் சிலர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு கட்சியில் உள்ள இந்து ஆதரவாளர்களின் உயிரினைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், கர்நாடகத்தில் யோகி மாடல் நிர்வாகம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தக்ஷின கன்னடாவில் பாஜக ஆதரவாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து இதனை அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களைப் பொறுத்தவரை யோகி மாடல் என்பது நாட்டிற்கு எதிராக செயல்படும் சக்திகளை கடுமையான நடவடிக்கைகள் மூலம் நீக்கும் அரசு ஆகும்.
தக்ஷின கன்னடாவில் பாஜக ஆதரவாளர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 28) முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. மேலும், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. தனது தலைமையில் ஓராண்டு ஆட்சி நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற இருந்ததும் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிக்க: இலங்கையில் அவசரநிலை ஆகஸ்ட்-14 வரை நீட்டிப்பு
அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பேரணியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பேரணியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.