பரூப்பூர்: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பரூப்பூர் பகுதியில் உள்ள பார்த்தா சாட்டர்ஜி மகளின் மிகப்பெரிய மாளிகை வீட்டில் புதன்கிழமை இரவு திருட்டுச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை இரவு மிகப்பெரிய பைகளுடன் வந்த நான்கு முதல் 5 திருடர்கள், வீட்டின் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைந்து விலை மதிப்புமிக்க பொருள்களைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. திருடர்கள் தப்பிக்கும் முன்பு, வீட்டிலிருந்த ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத்து வந்து வாயிலில் வைத்து திறந்துவிட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த மாளிகையை கவனித்து வந்த அபு தாஹேர் சர்தார் கூறுகையில், இந்த மாளிகை, மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மகளான சோஹினி சட்டர்ஜியின் வீடாகும். அவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் வாயிலில் சோஹினி என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. அர்பிதா முகர்ஜி வீடா அல்லது அலி பாபா குகையா? வியக்கும் அதிகாரிகள்
இது குறித்து எதிர்வீட்டில் வசிக்கும் ஜமால் அலி மொல்லாஹ் கூறுகையில், நள்ளிரவில் 3 முதல் 4 பேர் ஒரு காரில் வந்து இறங்கினர். கார்ச் சத்தம் கேட்டு நான் எழுந்த போது மணி 1.30 இருக்கும். வெளியே சென்று பார்த்து குரல் கொடுத்தேன். அவர்கள் என்னைத் தாக்கி வீட்டுக்குள் சென்றுவிடுமாறு மிரட்டினர். பிறகு அவர்கள் சுவர் ஏறிக் குதித்து வீட்டுக்குள் சென்றுவிட்டனர் என்கிறார்.
இது குறித்து சர்தார் கூறுகையில், நான் வீட்டின் உரிமையாளர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டேன். காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளேன். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தார்களே தவிர, அந்த வீட்டுக்குள் நுழையவில்லை என்றார்.
இது குறித்து சிபிஎம் கட்சித் தலைவர் ஒருவர் பேசுகையில் இது ஒரு திருட்டு நாடகம். அமலாக்கத் துறையினர் இங்கு சோதனையிடுவதற்குள் வீட்டுக்குள் இருந்த பொருள்களை மறைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். இதில் தொடர்புடையவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றார்.