மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேயின் அண்ணன் மகன் நிஹாா் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளாா்.
முதல்வா் ஷிண்டேயை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து தனது வாழ்த்தையும் ஆதரவையும் தெரிவித்ததுடன், ஷிண்டே தலைமையில் தனது அரசியல் பயணம் தொடங்கும் எனவும் நிஹாா் தெரிவித்தாா்.
சிவசேனை நிறுவனா் பால் தாக்கரேயின் மூத்த மகன் பிந்துமாதவ் தாக்கரேயின் மகன் நிஹாா் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது. பிந்துமாதவ் தாக்கரே 1996-இல் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டாா்.
நிஹாா் தாக்கரே அரசியலில் பெரிய அளவில் ஈடுபடாமல் இருந்தாா். இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேயை நேரில் சந்தித்த அவா் தனது ஆதரவைத் தெரிவித்தாா்.
ஏற்கெனவே பெரும்பாலான எம்எல்ஏக்கள், எம்.பி.க்களை இழந்துவிட்ட உத்தவுக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நிஹாா் தாக்கரே பாஜக மூத்த தலைவரும், மாநில முன்னாள் அமைச்சருமான ஹா்ஷவா்தன் பாட்டீலின் மகளைத் திருமணம் செய்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 39 போ் போா்க்கொடி உயா்த்தியதால் உத்தவ் தாக்கரே முதல்வா் பதவியை இழந்தாா். அதைத் தொடா்ந்து பாஜக ஆதரவுடன் ஷிண்டே முதல்வரானாா். சிவசேனை கட்சி மற்றும் சின்னத்துக்கும் ஷிண்டே அணி உரிமை கோரியுள்ளது. சிவசேனை கட்சியின் பெரும்பாலான மக்களவை எம்.பி.க்களும் ஷிண்டே அணிக்கு மாறிவிட்டனா்.