எண்களை தொடர்ந்து சரியாக கூறாத 9 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் கொடூரமாக தாக்கும் விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப்பிரதேசம் மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள மாமத்கெடா அரசுப் பள்ளி ஆசிரியர் ஜினேந்திர மோக்ரா, மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அழைத்து எழுத்து மற்றும் எண்களைத் தொடர்ந்து சரியாக கூறுமாறு கூறியுள்ளார்.
அந்த மாணவியும் 34 ஆவது எண் வரை சரியாக கூறியவர், பின்னர் 35 ஆவது எண்ணை கூறுவதில் தடுமாறியுள்ளார். இதனால் கோவம் அடைந்த அந்த ஆசிரியர் அந்த மாணவியை கொடூரமாக தாக்கியுள்ளார்.
மாணவியின் கன்னத்தில் அடுத்தடுத்து கொடூரமாக தாக்கிய ஆசிரியர், பின்னர் மாணவி தலையின் பின்பகுதியில் தாக்கியுள்ளார். தொடர்ந்து மாணவி தனது இடத்துக்கு சென்ற போது பின்வந்தவர் தொடர்ந்து தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த யாரோ ஒருவர் விடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலரும் மாணவியை கொடூரமாக தாக்கும் ஆசிரியரை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட கல்வி அதிகாரி.