தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள செடோவ் பகுதியில் வாகனத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 3 வீரர்கள் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் உளவுத்துறையின் அடிப்படையில் செடோவ் பகுதியில் சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இப்பகுதியிலிருந்து ஒரு கிமீ தொலைவில் வாகனம் ஒன்று வெடித்தது. இதில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர் என்று ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாகனத்தில் சக்திவாய்ந்த குண்டு அல்லது கையெறி குண்டு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காயமடைந்த வீரர்கள், சோபியான் மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒரு ராணுவ வீரர் ஆபத்தான நிலையில் உள்ளார். காயமடைந்த மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. தப்பிக்கும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளைப் பிடிக்கத் தேடுதல் பணி நடந்து வருகிறது.