புது தில்லி: பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை (இன்று) மாலை உயர்மட்டக் கூட்டத்தை நடத்த உள்ளார்.
உள்துறை அமைச்சக அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. கேரளத்தில் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாள்களுக்கு முன்னதாக மே 29 ஆம் தேதி தொடங்கியுள்ளது.
நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, இந்திய வானிலை ஆய்வுத் துறை இயக்குநர், தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர், மத்திய நீர் ஆணையத்தின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
அணைகளின் நீர்மட்டத்தை அதிகரிக்கவும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, அணைகளை தூர்வாரும் வழிமுறையை உருவாக்க ஜல் சக்தி அமைச்சகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.