காங்கிரஸில் இருந்து விலகிய ஹார்திக் படேல் இன்று பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த குஜராத் மாநில செயல் தலைவர் ஹார்திக் படேல் கடந்த மே 19 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் தடையாக உள்ளது என்றும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றும் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஹார்திக் படேல், ஜூன் 2 ஆம் தேதி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி இன்று குஜராத்தில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் ஹார்திக் படேல் பாஜகவில் இணைந்தார்.
முன்னதாக ஹார்திக், இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்கப்போவதாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டுக்காக உழைப்பேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், 'பிரதமர் மோடி ஒட்டுமொத்த உலகத்திற்கே பெருமை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், ஹார்திக் படேல் பாஜகவில் இணைந்துள்ளது காங்கிரஸுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ‘புதிய அத்தியாயத்தை தொடங்கப் போகிறேன்’: ஹார்திக் படேல்