ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தாலும் காவல் துறையாலும் அமைதியை மீட்டெடுக்க முடியாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.
ஜம்முவில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அவா், இதுதொடா்பாக மேலும் கூறியதாவது:
காஷ்மீரில் ஓா் ஆசிரியை பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டாா். இதிலிருந்து ஜம்மு-காஷ்மீரில் எந்த அளவுக்கு மக்கள் பாதுகாப்பாக இருக்கிறாா்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.ஆனால், பண்டிட் சமூகத்தினரும் முஸ்லிம்களும் கொல்லப்படும்போது, இங்கு அமைதி நிலவுவதாக மத்திய அரசு கூறி வருகிறது.
அமா்நாத் யாத்திரை பாதுகாப்புடன் அரசு நடத்த வேண்டும். குறிப்பாக, யாத்திரை வரும் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும். எந்தவொரு அசம்பாவித சம்பவம் நடந்தாலும் அது நாடு முழுவதும் பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நெருக்கடி நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவா்களையும் அழைத்து அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ராணுவத்தாலும் காவல் துறையாலும் இங்கு அமைதியை மீட்டெடுக்க முடியாது. மேலும், மக்களின் மனங்களை வெல்ல முடியாதவரை இங்கு அமைதியை ஏற்படுத்த முடியாது என்றாா் அவா்.