கர்நாடகத்தின் கலபுர்கி மாவட்டத்தில் ஹைதராபாத் நோக்கிச் சென்ற பேருந்து தீப்பிடித்ததில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 12 பயணிகள் காயமடைந்து கலபுர்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலபுர்கி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இஷா பந்த் கூறுகையில்,
முதற்கட்ட விசாரணையின்படி, எரிந்த பேருந்தில் 7 முதல் 8 பயணிகள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பிதார்-ஸ்ரீரங்கப்பட்டணா நெடுஞ்சாலையில் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள கமலாபூர் தாலுகாவின் புறநகரில் காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து கோவாவில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
பேருந்து - எதிரே வந்த லாரியுடன் மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது பேருந்து பாலத்தின் மீது மோதியதுடன், விபத்தின் தாக்கத்தால் சாலையை விட்டு விலகிச் சென்றது. விபத்து நடந்தபோது பேருந்தில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
கோவாவில் உள்ள ஆரஞ்சு நிறுவனத்துக்கு சொந்தமான தனியார் பேருந்து மோதிய சிறிது நேரத்திலேயே தீப்பிடித்ததால், அப்பகுதி மக்கள் அருகில் செல்ல முடியவில்லை. அவர்கள் காவல் துறையினருக்கும், தீயணைப்புப் படையினருக்கும், அவசரச் சேவைக்கும் தகவல் தெரிவித்தனர்.