புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி சுட்டுரையில், "உ.பி. முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 3.0 அடிக்கல் நாட்டு விழாவிற்காக லக்னெள புறப்பட்டு செல்கிறேன். மக்களின் வாழ்க்கையை மாற்றும் பல்வேறு முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும்" என்று கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த முதலீடுகள் பல்வேறு துறைகளை உள்ளடக்கியது என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
இந்தத் திட்டங்கள் விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல், உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்து, சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் விண்வெளி, கைத்தறி மற்றும் ஜவுளி போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. இவ்விழாவில் நாட்டின் முன்னணி தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து கான்பூரில் உள்ள பத்ரிமாதா மடத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் இணைந்து பிரதமர் மோடி செல்கிறார். மேலும் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.