நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13 ஆம் தேதி ஆஜராக காங்கிரல் எம்.பி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டு சம்மன் அனுப்பியுள்ளது.
சோனியாவும் அவருடைய மகன் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ அமைப்பு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவைச் சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்த பண மோசடி தொடா்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக, ‘யங் இந்தியா’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் அந்த பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜோ்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) நிா்வாக இயக்குநராகவும், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால பொருளாளராகவும் இருக்கும் பவன்குமாா் பன்சால் (73) ஆகியோரிடம் அமலாக்கத்துறை அண்மையில் விசாரணை நடத்தியது.
அப்போது, நிறுவனப் பங்குகள் பகிா்வு தொடா்பான விவரங்கள், நிதி பரிவா்த்தனைகள், யங் இந்தியா மற்றும் ஏஜேஎல் நிறுவன விளம்பரதாரா்களின் பங்கு ஆகியவை குறித்து அவா்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவா்களைத் தொடா்ந்து, சோனியா மற்றும் ராகுலுக்கு அமலாக்கத்துறை புதன்கிழமை அழைப்பாணை அனுப்பியது. அதன்படி, ராகுல் காந்தி வரும் 2-ஆம் தேதியும், சோனியா காந்தி வரும் 8 ஆம் தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து தான் வெளிநாட்டில் இருப்பதால் அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தார் ராகுல் காந்தி.
இந்நிலையில், வெளிநாட்டில் இருப்பதால் ராகுல் காந்தி அவகாசம் கோரியதை அடுத்து, வரும் 13 ஆம் தேதி (திங்கள்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என புதிய அழைப்பாணை அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.