பணமோசடி வழக்கில் தில்லி சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், கார்த்தி சிதம்பரம் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2011-இல் ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, 263 சீனர்களுக்கு கார்த்தி சிதம்பரம் முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.கே. நாக்பால், ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஸ்கரராமன் தொடர்பு இருக்கும் குற்றச்சாட்டைக் கருத்தில்கொண்டு முன்ஜாமீன் மனுக்களை நிராகரித்தார்.
இந்த நிலையில், முன்ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் கார்த்தி சிதம்பரம். இந்த வழக்கானது நீதிபதி பூனம் ஏ பம்பா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.