படங்களை விளம்பரப்படுத்த ஆர்வம் காட்டும் பாஜகவிற்கு காஷ்மீரின் பாதுகாப்பு மற்றும் காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து கவலை இல்லை என சிவசேனை பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரௌத் பாஜகவை விமர்சித்துள்ளார்
செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சஞ்சய் ரௌத் இதனை தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, “ காஷ்மீர் பாதுகாப்பு விஷயத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு அலட்சியம் காட்டி வருகிறது. காஷ்மீர் பண்டிட்டுகள் குறிவைத்து கொல்லப்படுவதற்கு எதிராக பாஜக சர்ஜிக்கல் ஸ்டிரைக் மேற்கொள்ளுமா? காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்துக்கள், காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் இஸ்லாமிய பாதுகாப்புப் படை வீரர்கள் குறிவைத்துக் கொல்லப்படுகிறார்கள். ஆனால், பாஜக “காஷ்மீர் ஃபைல்ஸ்” “சம்ரத் பிரித்விராஜ்” போன்ற படங்களை விளம்பரப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. காஷ்மீரில் பாதுகாப்பு இல்லாத சூழலில் பாஜக தனது 8 ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசி வருகிறது. கடந்த 1990ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருக்கும் போது தான் பண்டிட்டுகள் காஷ்மீரிலிருந்து முதன் முதலாக வெளியேற்றப்பட்டனர்” என்றார்.