முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இருவர் இன்று (ஜூன் 5) கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் தொலைக்காட்சி விவாத மேடையில் கலந்து கொண்ட பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டால் முகமது நபிகள் குறித்து கூறிய சர்ச்சைக் கருத்து இஸ்லாமியர்களால் வன்மையாக கண்டிக்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று (ஜூன் 5) அவர்கள் பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பாஜக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்திய வரலாற்றில் ஒவ்வொரு மதமும் சிறப்பாக வளர்ந்து வந்துள்ளது. பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த ஒரு மதமும் இழிவுபடுத்தப் படுவதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. அதேபோல எந்த மதத்தையும் ஒரு சித்தாந்தம் இழிவுப்படுத்துமானல் அதனையும் பாஜக வன்மையாக கண்டிக்கிறது. அவ்வாறு இழிவுப் படுத்துபவர்களை பாஜக ஊக்குவிக்காது. இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனும் தனக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்ற வழிவகை செய்கிறது. இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள இந்த வேளையில் நாட்டை வலிமைப்படுத்தும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. அந்த வலிமையான இந்தியாவில் அனைவரும் சமத்துவத்துடனும், ஒருமைப்பாட்டுடனும் செயல்படுவோம்” எனக் கூறியுள்ளது.
இந்த சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ள நூபுர் சர்மா மீது மஹாராஷ்டிர காவல் துறை இது போன்ற பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. இருப்பினும், நுபுர் சர்மா தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை எனவும், தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.