வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
சிட்டகாங் அருவே உள்ள கதம் ரசூல் பகுதியில் தனியார் கண்டெய்னர் நிலையில் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட 40 நிமிடங்களுக்குள் வெடிவிபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு 200 பேர் கொண்ட ராணுவ மீட்பு மற்றும் ரசாயன நிபுணர் குழுவுடன் 10 தீயணைப்பு வாகனங்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் மீட்புப் பணிகளுக்காக சென்ற தீயணைப்பு வீரர்களும் சிக்கினர். போலீசார், தீயணைப்பு வீரர்கள் உள்பட இதுவரை 450 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. பலியான 49 பேரில் 9 பேர் தீயணைப்பு வீரர்கள்.
படுகாயமடைந்தோர் சிட்டகாங்கில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஹைட்ரஜன் பெராக்சைடு ரசாயனம் இருந்த கண்டெய்னரில் ஏற்பட்ட ரசாயன எதிர்வினையால், தீ மற்ற இடங்களுக்குப் பரவி நீண்ட நேரம் எரிந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.