தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீதான அமலாக்கத் துறை சோதனை மத்தியில் ஆளும் பாஜகவின் ஒரு விதமான சித்ரவதை என ஆம் ஆத்மியின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசியிருப்பதாவது, “ அமலாக்கத் துறையின் இந்த சோதனை ஒரு விதமான சித்ரவதை. ஏனென்றால், அமலாக்கத் துறையினர் அமைச்சரிடம் 5 நாட்களாக விசாரணை நடத்தியுள்ளனர். அவர் நேர்மையானவர். அவர் தில்லியில் சிறப்பாக செயல்பட்டதால் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டவர்” என்றார்.
அமலாக்கத்துறை இன்று (ஜூன் 6) அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளது. கல்கத்தாவை மையமாக வைத்து செயல்படும் நிறுவனத்தில் ஹவாலா பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் அதில் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
கடந்த மே 30ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் அமைச்சர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட சில தினங்களிலேயே அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. அமைச்சர் வருகிற ஜூன் 9ஆம் தேதி வரை அமலாக்கத் துறையின் காவலில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஜூன் 5) பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நூபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டால் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்தும் சஞ்சய் சிங் பேசினார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ பாஜக செய்தித் தொடர்பாளர்களின் இந்த சர்ச்சைக் கருத்து பாஜகவின் பயிற்சியினாலேயே வந்தது. பாஜக தொடர்ந்து வெறுப்புணர்ச்சியை பரப்பி வருகிறது” என்றார்.