பஞ்சாபில் மூஸேவாலா குடும்பத்தினரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி
பஞ்சாபில் உள்ள சித்து மூஸேவாலா குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை சந்திக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா கடந்த வாரம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் கடந்த 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மான்சா தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக மூஸேவாலா இருந்தவர் .
இந்நிலையில், மூஸேவாலா கொல்லப்பட்ட அன்று ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்தார். அவர் இந்த வார இறுதியில் திரும்பினார்.
எனவே, மூஸேவாலாவின் பெற்றோரை ராகுல் சந்தித்து காங்கிரஸ் தலைமையின் சார்பில் ஆறுதல் வழங்க உள்ளதாகவும், அவருடன் பஞ்சாபைச் சேர்ந்த அவரது கட்சித் தலைவர்கள் வருவார்கள் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் ஏற்கனவே மூஸேவாலாவின் பெற்றோரை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.