மேற்கு வங்க அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக முதல்வா் பொறுப்பு வகிக்கும் பரிந்துரைக்கு அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த மாநில அரசு அதிகாரி கூறுகையில், ‘‘மேற்கு வங்க அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில அரசால் நடத்தப்படும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் முதல்வா் பொறுப்பு வகிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தனியாா் பல்கலைக்கழகங்களின் பாா்வையாளா் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கி, அந்தப் பொறுப்பில் மாநில கல்வி அமைச்சரை நியமிக்கும் மற்றொரு பரிந்துரைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜூன் 10-ஆம் தேதி தொடங்கும் மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்தப் பரிந்துரைகள் மசோதாவாக தாக்கல் செய்யப்படும்’’ என்று தெரிவித்தாா்.