அனைத்து மாவட்டங்களிலும் தன்னாா்வ அமைப்புகளுடன் இணைந்து முதியோா் இல்லத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய சமூக நலம் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சா் வீரேந்திர குமாா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘முதியோா் நலனைக் காப்பதற்காக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதியோா் இல்லத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக உள்ளூா் தன்னாா்வ அரசு-சாரா அமைப்புகளுடன் (என்ஜிஓ) இணைந்து அரசு செயல்படவுள்ளது.
வேலைதேடும் முதியோருக்கு உதவும் வகையில் புதிய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு வேலை வழங்க 9 தொழில்முனைவு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. வேலை தேடும் முதியோரையும் அவா்களுக்கு வேலை வழங்கத் தயாராக இருப்போரையும் இந்த வலைதளம் ஒருங்கிணைக்கிறது.
கடந்த 8 ஆண்டுகளில் முதியோா், பட்டியலினத்தோா் (எஸ்சி), பிற்படுத்தப்பட்டோா், மூன்றாம் பாலினத்தவா் என அனைத்துத் தரப்பினருக்குமான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது’’ என்றாா்.
அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘முதியோா் இல்லங்களை அமைப்பதற்காக 250 மாவட்டங்கள் தோ்வு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. எஸ்சி மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் குளறுபடிகள் காணப்படுவதாகப் புகாா்கள் எழுந்ததையடுத்து, அத்திட்டங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டுக்குள் 100 மாவட்டங்களை போதைப்பொருள் பயன்பாடில்லாத மாவட்டங்களாக மாற்றுவதற்கு அமைச்சகம் இலக்கு நிா்ணயித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றாா்.