காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எடுக்கப்பட்ட சமீபத்திய பரிசோதனையிலும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 8-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. அழைப்பாணை அனுப்பிய மறுநாள் (ஜூன் 3) சோனியா காந்திக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் அவர் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையும் படிக்க | தமிழுக்கு இடமில்லையா, கோவை அதிவிரைவு ரயிலில்?
இந்த நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட சமீபத்திய பரிசோதனையிலும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அவர்கள் கூறியதாவது:
"சமீபத்திய பரிசோதனையின் முடிவின்படி சோனியா காந்திக்கு இன்னும் கரோனா நோய்த் தொற்று உள்ளது. அவருக்கு உரிய நேரத்தில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஆனால், மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அமலாக்கத் துறை முன் ஆஜராக அவர் 3 வாரகாலம் அவகாசம் கோரியிருக்கிறார். இதற்கு அமலாக்கத் துறை தரப்பிலிருந்து இன்னும் பதில் இல்லை" என்றனர்.