கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு பூஸ்டா் (மூன்றாவது தவணை) தடுப்பூசியாக கோா்பிவேக்ஸை செலுத்த அனுமதிப்பது குறித்து தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுரை குழு (என்டிஏஜிஐ) ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோா்பிவேக்ஸை கரோனா பூஸ்டா் தடுப்பூசியாக செலுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்திருந்தது.
கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை 5 முதல் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தி சோதிக்கப்பட்ட தரவுகளையும் என்டிஏஜிஐ குழு ஆலோசிக்க உள்ளது.
கடைசியாக கடந்த மே மாதத்தில் இந்தக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில், இரண்டாம் தவணை தடுப்பூசிக்கும் பூஸ்டா் தடுப்பூசிக்குமான இடைவெளியை குறைப்பது பயனளிக்கும் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஒத்திவைத்தது.
தற்போது இரண்டாம் தவணை தடுப்பூசிக்கும் பூஸ்டா் தடுப்பூசிக்கும் இடையே 9 மாத இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.