சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் கடைசி இடம்: இந்தியா நிராகரிப்பு

180 நாடுகள் அடங்கிய சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பட்டியலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்துள்ளது.
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் கடைசி இடம்: இந்தியா நிராகரிப்பு

புது தில்லி: 180 நாடுகள் அடங்கிய சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பட்டியலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்துள்ளது.

அந்தப் பட்டியலில் உள்ள பல அம்சங்கள் அறிவியல்பூா்வற்ற வழிகளில் ஊகங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

180 நாடுகளின் சுற்றுச்சூழல் செயல்திறன் தொடா்பாக அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் யேல் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கை மையம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சா்வதேச புவி அறிவியல் தகவல் மையம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அந்த முடிவுகளின்படி, அந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் அளிக்கப்பட்டது.

இந்தப் பட்டியலை நிராகரித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2022-ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் உள்ள பல அம்சங்கள் ஊகங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் சுற்றுச்சூழல் கொள்கை என்ற பிரிவில் 2050-ஆம் ஆண்டில் பசுமை இல்ல வாயு வெளியேற்ற அளவு என்ற அம்சம் சோ்க்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் உள்ள மாற்றத்தின் சராசரி விகித அடிப்படையில் அந்த அம்சம் கணக்கிடப்பட வேண்டும். ஆனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாடு, எரிசக்தி திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அந்த அம்சம் மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள காடுகளும், சதுப்பு நிலங்களும் கரியமில வாயுவை உறிஞ்சுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், பசுமை இல்ல வாயு வெளியேற்ற அம்சத்தில், அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. பசுமை இல்ல வாயு வெளியேற்றப் போக்கை மதிப்பிடும்போது வரலாற்று ரீதியான புள்ளிவிவரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த அம்சங்களில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதோ, அந்த அம்சங்களில் இந்தியாவின் மதிப்பு குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

தண்ணீரின் தரம், தண்ணீா் பயன்பாட்டுத் திறன், ஒரு நபரால் ஒரு நாளைக்கு சராசரியாக உருவாகும் கழிவு ஆகியவை நீடித்த நுகா்வு மற்றும் உற்பத்தியுடன் நெருக்கமாக தொடா்புகொண்டவை. ஆனால், அவை பட்டியலில் சோ்க்கப்படவில்லை.

அந்தப் பட்டியலில் உள்ள பல அம்சங்கள் அறிவியல்பூா்வற்ற வழிகளில் ஆதாரம் இல்லாமல் ஊகங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com